புதன், 25 ஜூலை, 2018

ஒரிசா பயணக்குறிப்புகள் - நாள் - 01



கருமையான இருள் நகரமெல்லாம் படியத்தொடங்கும் இரவொன்றில், எப்பொழுதும் நான் இந்த கல்கத்தாவில் இருந்து புறப்படுகிறேன்.இங்கு ஐந்து மணிக்கெல்லாம் இருளத்தொடங்கிவிடுகிறது.அதன் பிறகு கருமையான இருள் நகரமெல்லாம் பரவும்.பத்து பதினொரு மணி வரை இங்குள்ள சந்யா பஜார்கள் இயங்கி கொண்டும்மக்கள் நடமாட்டமுமாய் இருக்கும்.ஆனால் மெல்ல மெல்ல இருளின் மௌனம் கவியத்தொடங்கிவிடும்.

இரவைக்குறித்து பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள்.இன்னும் இன்னும் தேடிக்கொண்டேயிருக்கிறார்கள்.இரவு எல்லாக்காலங்களிலும் மறுவாசிப்பு செய்யப்பட்டுக்கொண்டேயிருக்கிறதுயுகம் யுகமாக கவிஞர்களும், இசைஞானிகளும்,ஓவியர்களும் இந்த இரவின் முன் ஒரு கட்டத்தில் ஸ்த்தம்பித்து விடுகிறார்கள்.இரவுகள் மட்டும் தான் உங்களையே உங்களுக்கு அடையாளம் காட்டக்கூடியவை.இந்த இரவுகள் மட்டும் தான் நீங்கள் உங்களுக்குள்ளேயே பயணம் செய்கின்றீர்கள் என்ற உணர்வை உங்களுக்கு தரும்.

இப்படிப்பட்ட இரம்மியமான இரவை பார்த்து வியந்த மாபெரும் ஓவியக்கலைஞன் வின்சன்ட் வான்கோ இரவு குறித்த தன் மனப்பதிவை இவ்வாறு விவரித்திருப்பார்..

"I often think that the night is more alive and more richly coloured than the day." - Vincent Van Gogh


இவ்வாறான ஒரு இரவினை அழைத்துக்கொண்டு சியல்தா புகையிரத நிலையத்தில் இருந்து சியல்தா - பூரி துரொந்தோ எக்ஸ்பிரஸின் ஊடாக ஒரிசாவை நோக்கி 29.6.2018 அன்று இரவு 8.மணியளவில் எங்கள் பயணம் தொடங்கியது.

இரவு புகையிரத பயணங்களை கவனித்திருக்கிறீர்களா..? அதில் எல்லாவற்றையும் தாண்டிய ஒரு பிணைப்பு இருக்கும்.இன்று எத்தனையோ அதிவேக போக்குவரத்து வசதிகள் வந்துவிட்டன.எவ்வளவோ சொகுசான பயண போக்குவரத்து முறைகள் கொட்டிக்கிடக்கின்றன.ஆனால் புகையிரத பயணங்கள் ஏற்படுத்துகின்ற அனுபவங்கள்,அதற்கு இருக்கும் ஒரு வசீகரம் தனித்துவமானது.புகையிரதங்கள் ஏற்படுத்திய தாக்கம் மனித போக்குவரத்து சாதனங்களில் முக்கியமானது.இந்த புகையிரதங்கள் குறித்தும் ,புகையிரத பயண அனுபவங்கள் குறித்தும் அதிகளவாக பேசப்பட்டிருக்கின்றனஇன்றளவும் பேசப்பட்டுகொண்டிருக்கின்றன.புகையிரத அனுபவங்களை கதை கருவாக கொண்டு பிரசித்திபெற்ற இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. 

அவற்றில்
- Mugby Junction by Charles Dickens(1866),
- La Bete Humaine by Emile zola(1890),
- The Railway Children by E Nesbit(1906),
- Stories of the railway by VL White church (1912),
- Bradshaw 's April 1910 Railway Guide (1968),
- The Great Railway Bazaar by Paul Theoroux(1975),
- The Railway station : A social History by Jeffrey Richards and John M Mackenzic(1986),
- Fire and steam : A new history of the railway Britain by Christian Wolmar (2007),
- Eleven minutes late : A train journey to the soul of Britain ; by Mathew Engel (2009),
போன்ற நூல்கள் அதிகளவில் பேசப்படுகின்றன.

உலகின் மாபெரும் இலக்கிய மேதைகளில் ஒருவரான டால்ஸ்டாய் பல கோடி சொத்துகளுக்கும்,நிலங்களுக்கும் அரண்மனைப்போன்ற வீடுகளுக்கும்,அன்பால் பணிவிடை செய்யக்கூடிய உறவுகளுக்கும் சொந்தக்காரராய் இருந்தார்.அப்படிப்பட்ட எழுத்துலகிலும்,நிஜ உலகிலும் கோடிஸ்வரனாய் இருந்த அவரின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்ட இடம் அஸ்தபோல் ரயில் நிலையத்தில் கோப்புகளும்,தூசிகளும் நிறைந்த ஒரு சின்னஞ்சிறிய அறை தான்.
இரவு எனக்கு எப்படி பிடிக்குமோ ,அவ்வளவு இந்த இரவு ரயில் பயணமும் பிடித்து போகிறது.

நான் இந்த நகரங்களை விட கிராமங்களை ரொம்பவே நேசிக்கிறேன்.மின்சாரம் வராத கிராமங்கள் இன்னும் கிராமங்களாகவே இருக்கின்றன.தூரத்தில் ஓரிரண்டு வீடுகள்,அதில் அகண்ட வானில் இருந்து விழுந்த நட்சத்திரம் போல மிதமான ஒளியில் ஓரிரு மின்விளக்குகள், பரந்து விரிந்த பொட்டல்காடுகள்,ஆங்காங்கே இருக்கும் நீர்நிலைகளின் ஊடு மிதந்து வரும் இந்த வட்ட நிலா,இருளில் மங்கலாக தெரியும் ஒரிசாவிற்கென்று தனித்துவமான கோவில் கோபுரங்கள்,கடந்து போகின்ற புகையிரத நிலையங்கள், புகையிரதங்களுக்காக காத்திருக்கும் ஆண்கள்,பெண்கள்,எப்போதும் இந்த ரயில் நிலையத்தில் , சுயநினைவிழந்த நிலையில் திரியும் மனிதர்கள்,ப்ளாட்பார இடுக்குகளில் படுத்துறங்கும் பிச்சைகாரர்கள்,பத்து மணி வரை அதிகமாக வந்து போகும் கரம் ச்சாய்காரர்கள் ,மூரி விற்பவர்கள்,கூடவே பயணம் செய்கின்ற வட நாட்டுக்காரர்கள் ,எப்பொழுதும் இந்த இரயில் நிலையத்தில் இயங்கிகொண்டே இருக்கின்ற பொட்டி கடைகள் என இரவு ஒரிசா இரயில் பயணம் தந்த பயணம் இரம்மியமான இரவின் நீட்சியோடு 29.6.2018 ,8 மணிக்கு ஆரம்பித்து 30.6.2018 அன்று காலை 4.30 மணியளவில் ஒரிசா புகையிரத நிலையத்தை வந்தடைந்தோம்.

29.6.2018

1 கருத்து:

  1. வெண்மையான பின்புலத்தில் கருப்பு எழுத்துக்கள் இருந்தால் படிக்க ஏதுவாக இருக்குமென்று நினைக்கிறேன். எனினும் உங்கள் விருப்பம் எதுவோ அதையே தொடருங்கள்

    பதிலளிநீக்கு